தமிழ்நாடு செய்திகள்

அருந்ததியர் உள் ஒதுக்கீடு- அ.தி.மு.க.-வின் முயற்சிகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்: இ.பி.எஸ்.

Published On 2024-08-03 12:00 IST   |   Update On 2024-08-03 12:14:00 IST
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்
  • தமிழக அரசு, 2009-ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு சட்டப்பாதுகாப்பை பெற்றுத் தந்த இயக்கம் அ.தி.மு.க. இட ஒதுக்கீடு கொள்கையை தமிழகத்தில் 100 சதவீதம் அமல்படுத்தி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் இன்று வரை பயனடைந்து வருகின்றனர் என்றால், அதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க. தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பெயர்கள் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.; 1991-96 ஆட்சிக் காலத்தில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய மத்திய அரசிடம் போராடி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியல் சாசன சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்து

தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தைப் பெற்றவர் புரட்சித் தலைவி அம்மா. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களில், மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கின்ற அருந்ததியர்களின் வளர்ச்சிக்காக, கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா வழியில், எனது தலைமையிலான அ.தி.மு.க. தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை, குறிப்பாக அருந்ததியரை கண் இமைபோல் பாதுகாத்தது வந்தது.

தமிழக அரசு, 2009-ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், அருந்ததியர் மக்களை வஞ்சிக்கின்ற வகையில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் வகையிலான வழக்குகள் 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் திட்டமிட்டு தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த உள் இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

எனது தலைமையிலான அம்மாவின் அரசு, அருந்ததியர் மக்களுக்கான உள் இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய ஆதிதிரா விடர் நலச் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின்படி அம்மாவின் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு திறம்பட கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதன் அடிப்படையில் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அருண்மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு சாதகமான இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.

பின்பு இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அம்மாவின் அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இன்றைய தமிழக அரசும் வாதங்களை எடுத்து வைத்ததன் அடிப்படையில்,

'அரசியல் சாசன 14-வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை; பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை; பட்டியல் இனத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை. எனவே, எஸ்சி., எஸ்.டி. பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்' என்ற தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு 1.8.2024 அன்று வழங்கியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வருவதற்கு முக்கிய காரணம் நீதிபதி அருண்மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்புதான் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வழக்கில் அ.தி.மு.க. எடுத்த முயற்சிகள், சட்ட முன்னெடுப்புகள், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டு, இந்தத் தீர்ப்பினைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த சட்ட வல்லுநர்கள், முழு ஆதரவு அளித்த தமிழ்நாடு அருந்ததியர் சமுதாய மகாசபை, அருந்ததியர் சமூக மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அ.தி.மு.க. சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News