தமிழ்நாடு செய்திகள்

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எலெக்ட்ரிக் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Published On 2023-09-22 07:47 IST   |   Update On 2023-09-22 07:47:00 IST
  • பின்பகுதியில் மற்றொரு பேருந்து மோதியால் விபத்து ஏற்பட்டது
  • பேருந்தில் இருந்த 30 பயணிகள் உயிர்தப்பினர்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இது மின்சாரத்தில் இயங்கும் இ-பேருந்தாகும். இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பேருந்து பூந்தமல்லியையடுத்த பாப்பாசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மின்சார பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி உயிர்தப்பினர்.

இதற்கிடையே அருகில் இருந்தவர்கள், அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை மடக்கி, தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீ கட்டுக்குள் வருவதுபோல் இருந்தது.

பேட்டரியில் இயங்கும் பேருந்து என்பதால், ஸ்பார்க்காகி தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமாகியது.

அதனைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News