திருப்பூர் அம்மன் கோவிலில் தக்காளி சாதம் வாங்க குவிந்த பக்தர்கள்
- சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாகாளியம்மனை சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
- மாகாளியம்மன் கோவிலில் தக்காளி சாதம் வழங்கும் தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்:
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிக்கவுண்டம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளியையொட்டி கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.
இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாகாளியம்மனை சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு பக்தர்களுக்கு அன்னதானமாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் வீடுகளில் முடிந்த வரை தக்காளி பயன்பாட்டை இல்லத்தரசிகள் குறைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாகாளியம்மன் கோவிலில் தக்காளி சாதம் வழங்கும் தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலில் குவிந்தனர். ஆனாலும் அனைவருக்கும் தக்காளி சாதம் நிறைவாக வழங்கப்பட்டது.