தமிழ்நாடு

ஹரிராஜ்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2023-10-18 03:31 GMT   |   Update On 2023-10-18 03:32 GMT
  • ஹரிராஜ் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
  • டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஹரிராஜ் (வயது 19). இவர் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அறந்தாங்கி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் டெங்கு பாதிப்பு உள்ளதாக கூறினார்.

அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஹரிராஜ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து ஹரிராஜின் உடல் அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்பு மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. ஹரிராஜின் உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.

டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகர் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News