கல்லூரி மாணவி தற்கொலை- சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை
- தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- மாணவி வர்சா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
சித்தோடு:
திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் வர்சா (22).
இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவி வர்சா தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து மாணவியின் தாய் சித்ரா சித்தோடு போலீசில், தனது மகள் காதில் வண்டு புகுந்து விட்டதால் வலி ஏற்பட்டு தன்னால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று தன்னிடம் போனில் தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில் எனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்தார் என்றும் தங்களது மகள் சாவில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறியிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவி வர்சா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து கோவை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் ஈரோடு சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அவர்கள் நேற்று கல்லூரிக்கு சென்று மாணவி தற்கொலை செய்துகொண்ட அறையில் சோதனை செய்தனர். மேலும் மாணவியின் லேப்டாப் மற்றும் செல்போன்களை கைப்பற்றினர்.
இன்று 2-வது நாளாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர்கள் மாணவி வர்சாவின் தோழிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர்.