கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரும் பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்
- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6 பேரையும் அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
- கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் 6 பேரையும் புழல் சிறையிலேயே அடைக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
பூந்தமல்லி:
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர் 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (28) என்பவர் பலியானார்.
இதையடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று 6 பேரையும் கோவை சிறையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர்.
இன்று காலை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் 6 பேரையும் புழல் சிறையிலேயே அடைக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.