தமிழ்நாடு செய்திகள்

மாணவி ஸ்ரீமதி வீட்டில் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் விசாரணை

Published On 2022-07-27 11:05 IST   |   Update On 2022-07-27 11:05:00 IST
  • சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
  • இன்று காலை தேசிய மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சரண்யா ஜெயக்குமார், முரளி ஆகியோர் தலைமையில் பெரியநெசலூர் கிராமத்துக்கு சென்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பு காரணமாக கடந்த 17-ந் தேதி கலவரம் வெடித்தது.

இதனைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கையால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்தனர். 2 முறை பிரேத பரிசோதனை செய்தும் தங்களது மகளின் சாவுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று பெற்றோர் தொடர்ந்து போராடினர்.

இதனைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுபடி மாணவியின் உடலை பெற்றோர் வாங்கினர். அதன்பின்னர் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. என்றாலும் மாணவியின் பெற்றோருக்கு சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஆறுதல் கூறி வருகிறார்கள். இது தவிர அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினரும் நேரடியாக மாணவியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி இன்று காலை தேசிய மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சரண்யா ஜெயக்குமார், முரளி ஆகியோர் தலைமையில் பெரியநெசலூர் கிராமத்துக்கு சென்றனர். அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் நடவடிக்கைகள், படிப்பு விபரம் குறித்து அவர்கள் தகவல் சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News