வாய்க்காலில் கார் பாய்ந்தது- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினர்
- திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணன் என்பவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள எண்கன் மலையூர் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது 67). இவரது மனைவி ருக்மணி(59), மகன் இதுநந்தவர்மன்(37), ருக்மணியின் தாயார் கஸ்தூரி(90) ஆகியோர் நேற்று காலை வீட்டில் இருந்து காரில் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை புஷ்பராஜ் ஓட்டினார்.
திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் காக்கா கோட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பின்னர் காக்காகோட்டூர் பாசன வாய்க்காலில் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணன்(25) என்பவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.