தமிழ்நாடு

சூறைக்காற்றில் சிக்கி படகு கவிழ்ந்தது: குளச்சல் மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கினர்

Published On 2023-09-29 06:42 GMT   |   Update On 2023-09-29 06:42 GMT
  • கடலில் தத்தளித்தவர்களில் படகின் உரிமையாளர் ஆரோக்கியம் உள்பட 13 பேரை மீட்டனர்.
  • மாயமான மீனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

குளச்சல்:

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது52). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்துள்ளார். அந்த படகில் கடந்த 25-ந்தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து படகின் உரிமையாளரான ஆரோக்கியம், ஆன்றோ(47) உள்பட 16 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கன்னியாகுமரி கிழக்கு கடல் பகுதியான உவரி பகுதியில் அவர்களது படகு வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சூறைக்காற்று வீசியது.

இதனால் ராட்சத அலையில் சிக்கி அவர்களது படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த ஆரோக்கியம் உள்ளிட்ட 16 பேரும் கடலுக்குள் விழுந்தனர். அவர்கள் அனைவரும் தத்தளித்தபடி கிடந்தனர். இதனை அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பார்த்தனர்.

அவர்கள் கடலில் தத்தளித்தவர்களில் படகின் உரிமையாளர் ஆரோக்கியம் உள்பட 13 பேரை மீட்டனர். ஆன்றோ, பையாஸ், மற்றொரு ஆரோக்கியம் ஆகிய 3 மீனவர்களும் கடலில் மாயமாகினர். அவர்களை கடலில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மீட்கப்பட்ட 13 மீனவர்களை தங்களது படகிலேயே கரைக்கு அழைத்து வந்தனர்.

கடலில் 3 மீனவர்கள் விழுந்து மாயமானது. குறித்து குளச்சல் விசைப்படகு சங்கம், மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரின் கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.

மாயமான மீனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News