தமிழ்நாடு செய்திகள்

சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாய்...!

Published On 2023-09-21 09:42 IST   |   Update On 2023-09-21 13:38:00 IST
  • 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன நிலையில், யாரோ ஏமாற்றுவதாக நினைத்துள்ளார்
  • நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பி உறுதி செய்துள்ளார்

பழனி அருகே உள்ள நெய்க்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். கால்டாக்சி டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

இவர் கடந்த 9-ந்தேதி மதியம் 3 மணியளவில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அதில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக அவரது செல்போனில் குறுந்தகவல் வந்தது.

அதில் நிறைய பூஜ்ஜியங்கள் இருந்ததால் அந்த தொகை எவ்வளவு என்பதை அவரால் கணக்கிட முடியவில்லை. அவரது வங்கி கணக்கில் ஏற்கனவே ரூ.105 மட்டுமே இருந்தது. தன்னை யாரோ ஏமாற்றி கிண்டல் செய்ய நினைத்து இந்த குறுந்தகவலை அனுப்பி இருக்கலாம் என்று நினைத்தார்.

ஆனால் அவர் அந்த குறுந்தகவலை ஆய்வு செய்தபோது அது தான் கணக்கு வைத்திருந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இருந்து வந்ததை உறுதி செய்தார். அதன் பிறகு கணக்கிட்டபோது ரூ.9 ஆயிரம் கோடி பணம் வந்தது தெரிய வந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த பணத்தில் இருந்து ரூ.21 ஆயிரத்தை தனது நண்பரின் வங்கி கணக்குக்கு அனுப்பினார்.

இதற்கிடையே சுமார் 30 நிமிடங்களில் அந்த பணம் வங்கியில் இருந்து திரும்ப பெறப்பட்டது. ஆனால் ரூ.21 ஆயிரம் பணத்தை வேறு கணக்குக்கு ராஜ்குமார் அனுப்பி இருந்ததை வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த வங்கி கிளை அதிகாரிகள் ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை தவறுதலாக உங்களது வங்கி கணக்கில் செலுத்தியாகவும் அதனால் மீண்டும் எடுத்துக் கொண்டதாகவும் கூறி ரூ.21 ஆயிரம் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். அதை வங்கியில் ஒப்படைக்குமாறும் கூறினார்கள்.

இதற்கிடையில் வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி வந்ததால் பயந்துபோன ராஜ்குமார் வக்கீல் ஒருவருடன் தி.நகரில் உள்ள வங்கி கிளைக்கு சென்றார். அங்கு ராஜ்குமார் தரப்பிலும், வங்கி தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரும் சமாதானமாக செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தி.நகரில் உள்ள வங்கி கிளையில் எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. நான் எனது நண்பருக்கு அனுப்பிய ரூ.21 ஆயிரம் பணத்தை திருப்பி தர வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் கூறினார்கள். மேலும் வங்கி சார்பில் எனக்கு கார் கடனும் வழங்கப்பட்டள்ளது என்றார்.

Similar News