அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 28 காளைகளை அடக்கிய விஜய்க்கு முதலமைச்சர் வழங்கும் கார் பரிசு
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளாக நடத்தப்பட்டது
- அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
மதுரை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்தார். அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார்.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் விஜய். அவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது.
அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப்பிடித்தார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கரவாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு மூன்றாம் பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.
விஜய் மூன்றாம் முறையாக முதல் பரிசு பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2020, 2021ம் ஆண்டுகளிலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.
காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.