பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் வருகை: கொடைக்கானலில் பிரசாரம் செய்கிறார்
- பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
- 16-ந்தேதி பழனியில் நடைபயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
திண்டுக்கல்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று தனது நடைபயணத்தை தொடங்குகிறார். நாயுடுபுரத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக அவர் தனது பிரசாரத்தை இன்று மாலை மேற்கொள்கிறார். அதனைதொடர்ந்து நாளை மதியம் நிலக்கோட்டையிலும், மாலை ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டியிலும் நடைபயணம் மேற்கொண்டு பேசுகிறார்.
நாளை மறுதினம் வியாழக்கிழமை மதியம் நத்தத்திலும், மாலை திண்டுக்கல்லிலும் நடைபயணம் மேற்கொண்டு 2 இடங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் அண்ணாமலை பேசுகிறார். வருகிற 15-ந்தேதி மதியம் வேடசந்தூரிலும், மாலை ஒட்டன்சத்திரத்திலும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை அங்கு நடைபெறும் கூட்டங்களிலும் பேசுகிறார்.
16-ந்தேதி பழனியில் நடைபயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு 7 தொகுதிகளிலும் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.