செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலையில் 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு
- அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
- உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர் சந்தைகள் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர், போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதை செயல்படுத்தும் விதமாக இப்போது உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் செங்கல்பட்டு உழவர்சந்தைக்கு ரூ.32.10 லட்சம்,வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தைக்கு ரூ.42,72 லட்சம், செங்கம் உழவர் சந்தைக்கு ரூ.32.10 லட்சம், திருச்சி துறையூர் உழவர் சந்தைக்கு ரூ.35 லட்சம், சேலம் எடப்பாடி உழவர் சந்தைக்கு ரூ.43.30 லட்சம், அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு ரூ.4.06 லட்சம் என 25 உழவர் சந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த தொகையை வைத்து அலுவலக அறை புதுப்பித்தல, கழிப்பறை அமைத்தல், மற்றும் குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் கட்டுதல், மின்னணு சாதனங்கள் பொருத்துதல், வடிகால் மறுசீரமைப்பு நடைபாதை அமைத்தல், சுவர்களில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.