16 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
- கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
- மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது வழக்கம்.
இந்த அருவிக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த 31-ந்தேதி மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது படிப்படியாக வெள்ளப்பெருக்கு குறைந்து வந்ததால், இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
16 நாட்கள் தடைக்கு பின்னர் இன்று முதல் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.