தமிழ்நாடு

திருப்பூர் அருகே கல்லால் தாக்கி விவசாயி கொலை

Published On 2023-09-12 07:21 GMT   |   Update On 2023-09-12 07:21 GMT
  • கோவிந்தசாமிக்கும் அவரது மகன் நடராஜனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
  • நெஞ்சில் காயம் ஏற்பட்டதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் முத்தையம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த சாமி (வயது 86). விவசாயியான இவருக்கு சாமிநாதன் (60), நடராஜ் (55) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கோவிந்தராஜ்க்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. மேலும் கோவிந்தசாமிக்கும் அவரது மகன் நடராஜனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் இன்று காலை கோவிந்தசாமி தனது தோட்டத்தில் வளர்ப்பு மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து விழுந்த 2 தேங்காய்கள் சாக்கடையில் கிடந்தன.

அதனை எடுத்த கோவிந்தசாமி, எதிரே உள்ள தோட்டத்திற்குள் வீசி உள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த மகன் நடராஜனின் மனைவி ஈஸ்வரி (50), பேத்தி லாவண்யா (25) ஆகியோர் அடுத்தவர் தோட்டத்திற்குள் எதற்காக தேங்காயை வீசினாய் என தகாத வார்த்தைகளால் பேசினர்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஈஸ்வரி, லாவண்யா ஆகியோர் கீழே கிடந்த கல் மற்றும் தேங்காயை எடுத்து கோவிந்தசாமி மீது வீசினர் . இதில் நெஞ்சில் காயம் ஏற்பட்டதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈஸ்வரி, லாவண்யா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். லாவண்யா பல்லடத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயியை மருமகள் மற்றும் அரசு பெண் அதிகாரி கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News