தேனி மாவட்டத்தை சேர்ந்த 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு
- ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தமாவட்டமான தேனியில் நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் தனித்தனியாக நடைபெற்றது.
- எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்குவோம் என்று தீர்மானித்தனர்.
தேனி:
அ.தி.மு.கவில் ஒற்றைதலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பெரும்பாலான அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தமாவட்டமான தேனியில் நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் தனித்தனியாக நடைபெற்றது.
தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், ஓ.பி.எஸ் ஆதரவாளமான சையதுகான் தலைமையில் ஆலோசனை நடத்திய நிர்வாகிகள் தங்கள் ஆதரவை ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏவும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான ஜக்கையன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்குவோம் என்று தீர்மானித்தனர்.
இந்நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி பார்த்திபன், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலச்சந்தர், தனலட்சுமி சொக்கலிங்கம், பேரவை இணைச்செயலாளர் கரிகாலன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் நாராயணன், தேனி ஒன்றிய துணைச்செயலாளர் தயாளன் ஆகிய பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்திலேயே பொதுக்குழு உறுப்பினர்கள் அணி மாறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.