தமிழ்நாடு

மகாளய அமாவாசை, வார இறுதி நாட்களையொட்டி இன்று 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-10-13 02:48 GMT   |   Update On 2023-10-13 02:48 GMT
  • சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
  • வார இறுதி நாட்களில் பயணம் செய்ய 8 ஆயிரத்து 58 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகாளய அமாவாசை நாளை (14-ந் தேதி) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு இன்றும் (வெள்ளிக்கிழமை), ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளையும் (சனிக்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை), தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் என 600 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்களில் பயணம் செய்ய 8 ஆயிரத்து 58 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். வருகிற 15-ந்தேதி (ஞாயிறு) மட்டும் 6 ஆயிரத்து 138 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த சிறப்பு பஸ்கள் அறிவிப்பால், பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News