பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
- வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
- புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3158 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்வரத்து அதிகமானதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து முழுவதும் நிரம்பியது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 13-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு ஏரிகளுக்கும் வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே பூண்டி ஏரியில் போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை கருத்தில் கொண்டு இன்று காலை முதல் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. புழல் ஏரிக்கு மட்டும் வினாடிக்கு 240 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 33.82 அடி ஆக பதிவானது. ஏரியில் 2.767 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரி யத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 3424 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3158 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. புழல் ஏரியும் 95 சதவீதம் நிரம்பி இருப்பதால் வரும் நாட்களில் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கும் தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்படும். எனவே கண்டலேறு அணை யில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பும் வரும் நாட்களில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அதிகாரிகள் ஏற்கனவே ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.