தமிழ்நாடு செய்திகள்

ஆரணி ஆற்றில் புதுப்பாளையம்-மங்களம் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் 25 கிராமங்கள் துண்டிப்பு

Published On 2022-11-14 10:59 IST   |   Update On 2022-11-14 10:59:00 IST
  • புதுப்பாளையம், மங்களம் ஆகிய கிராமங்களில் உள்ள தரைபாலம் மற்றும் மண் சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • பொதுமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து தங்களது பயணத்தை தொடங்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே ஆரணி ஆற்றில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதேபோல், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்களம் ஊராட்சியில் மங்களம்-ஆரணி இடையே ஆரணி ஆற்றில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட மண் சாலை ஒன்று உள்ளது.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்ததால் ஆரணி ஆற்றில் பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது. அணைக்கட்டில் இருந்து உபரி நீர் தண்ணீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், சுண்ணாம்பு கால்வாயில் இருந்து அதிக அளவு தண்ணீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

புதுப்பாளையம், மங்களம் ஆகிய கிராமங்களில் உள்ள தரைபாலம் மற்றும் மண் சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவர்களும், தனியார் மற்றும் அரசு துறை பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆபத்தை உணராமல் இப்பகுதியில் பொதுமக்கள் குளிப்பதும், வாகனங்களை கழுவுவதும், செல்பி எடுப்பதுமாக இருந்தனர்.

இதையடுத்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் ஆரணி மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் இப்பகுதியில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டது.

இதனால் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து தங்களது பயணத்தை தொடங்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

எனவே, ரூ.20 கோடி செலவில் புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்று கட்ட இம்மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இப்பணியை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இப்பணியை முடித்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News