தமிழ்நாடு
விசாரணை

பணி நியமன முறைகேடு புகார்- மதுரை ஆவின் ஊழியர்கள் 61 பேரிடம் விசாரணை

Published On 2022-05-27 05:25 GMT   |   Update On 2022-05-27 05:41 GMT
5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின்போது பணி நியமனம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பால் வினியோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நடத்தப்பட்டு பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் ஆவின் மேலாளர் உள்ளிட்ட 61 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 61 ஊழியர்களும் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. பால்வளத்துறை கூடுதல் செயலாளர் ஜவகர் தலைமையிலான விசாரணை கமிட்டியிடம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை மதுரை ஆவின் நிறுவனத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின்போது பணி நியமனம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும் பட்சத்தில் பணி நியமன முறைகேட்டில் தொடர்புடைய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. எனவே புதிதாக ஆவினில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விசாரணையில் அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் பணி நியமனம் தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு பதிலை பெற்று வருகிறார். இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் கிலி ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News