தமிழ்நாடு
ஊராட்சி தலைவர் குடும்பத்துடன் வந்த காரை கொலையாளிகள் லாரியால் மோதும் காட்சி

மீஞ்சூர் அருகே ஊராட்சி தலைவர் படுகொலை- லாரியால் காரை மோதும் பதைபதைக்கும் வீடியோ காட்சி

Published On 2022-05-17 06:41 GMT   |   Update On 2022-05-17 06:41 GMT
மீஞ்சூர் அருகே ஊராட்சி தலைவர் படுகொலை தொடர்பாக 7 பேரை பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த கொண்டகரையை சேர்ந்தவர் மனோகரன் (வயது38). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கொண்டகரை ஊராட்சியில் 2வது முறையாக தலைவராக பதவி வகித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் மனைவி சர்மிளா, மகன் ரக்சன், மகள் ரக்சிதா ஆகியோருடன் குருவி மேடு கிராமத்தில் நடந்த ஒரு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து விட்டு காரில் திரும்பி கொண்டு இருந்தார்.

குருவி மேடு அசோக் லேலாண்ட் கம்பெனி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி திடீரென கார் மீது மோதி இடித்து தள்ளியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் சரிந்து சிக்கியது.

அப்போது லாரியில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 10 பேர் கும்பல் மனோகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

கொலையுண்ட ஊராட்சி தலைவர் மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதேபோல் வல்லூர் அனல்மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளை எடுக்கும் ஒப்பந்தம் மற்றும் தனியார் கம்பெனிகளில் காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்துள்ளார்.

தொழில் போட்டியில் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் 7 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே மனோகரன் காரில் வந்தபோது லாரி மோதி தள்ளும் பதைபதைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி உள்ளது.

அதில் மனோகரன் குடும்பத்துடன் வந்த காரை எதிரே லாரியில் வந்த கொலை கும்பல் மோதி இடித்து சிறிது தூரம் தள்ளி செல்கின்றனர். பின்னர் லாரியில் இருந்து இறங்கும் மர்மநபர்கள் மனோகரனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகி உள்ளது.

மனோகரனை கொலையாளிகள் வெட்டியதும் கடைசி நேரத்தில் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர் காரில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது மனோகரனும், அவரது மனைவி சர்மிளாவும் கொலையாளிகளிடம் உயிருடன் விட்டுவிடுங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று கெஞ்சி உள்ளனர்.

அப்போது கொலையாளிகள் எவ்வளவு பணம் கொடுப்பாய் என்று கேட்டபடி மனோகரனை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி இருக்கிறார்கள்.

இந்த கொலையில் ஈடுபட்டது கூலிப்படையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, மனோகரன் கொலையில் குற்றவாளிகள் சிக்கி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

Tags:    

Similar News