தமிழ்நாடு
வழக்கு

கணவர் புகாரின் பேரில் பெண்ணின் பெற்றோர் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2022-04-15 05:08 GMT   |   Update On 2022-04-15 05:08 GMT
ஈரோட்டில் மனைவியை கடத்தியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெற்றோர் உள்பட 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் (24). அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த உஷா நந்தினி (24) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் விக்ரம், உஷா நந்தினி வீட்டை விட்டு வெளியேறி பவானியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நீலாதேவி விசாரித்தார். அவர் இது குறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். இரு வீட்டு பெற்றோரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் உஷா நந்தினி தனது கணவருடன் தான் செல்வேன் என்று கூறினார். பெண் மேஜர் என்பதால் உஷாநந்தினியை அவர் கணவருடன் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

அங்கிருந்து சென்ற புதுமண தம்பதிகள் கள்ளுக்கடை மேட்டில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் என 30 பேர் 3 கார்களில் அங்கு வந்து விக்ரமை தாக்கி உஷா நந்தினியை காரில் கடத்தி சென்றனர்.

இது குறித்து விக்ரம் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் தனிப்படை போலீசார் பெண்ணை மீட்பதற்காக சென்றனர்.

இதற்கிடையே உஷா நந்தினி கடத்தப்பட்டதாக விக்ரம் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் உஷா நந்தினியின் பெற்றோர், சகோதரர், அவரது உறவினர் உட்பட 30 பேர் மீது கூட்டமாக கூடுதல், பெண்ணை கடத்துதல், தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, வாகனத்தை வழிமறித்தது உள்பட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட உஷா நந்தினியை அவரது வீட்டிலிருந்து சூரம்பட்டி போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தான் தனது பெற்றோருடன் செல்வதாக உஷாநந்தினி கூறினார்.

இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். பின்னர் உஷாநந்தினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் தனது பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதனை ஏற்று அவர் பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து உஷா நந்தினி தனது பெற்றோருடன் சென்றார்.
Tags:    

Similar News