தமிழ்நாடு
நாகை வனசரக அலுவலகம்

நாகையில் வனத்துறை அலுவலகத்தில் 400 கிலோ கடல் அட்டை மாயம்

Published On 2022-04-13 05:40 GMT   |   Update On 2022-04-13 05:40 GMT
கடல் அட்டை இருப்பு குறித்து வனசரகர் அனந்தீஸ்வரன் சோதனை செய்தார். அப்போது 1060 கிலோ கடல் அட்டையில் 400 கிலோ கடல் அட்டை மாயமானது தெரியவந்தது.

நாகப்பட்டினம்:

நாகை வனத்துறையினர் கடந்த 2020-ம் ஆண்டு அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் தடைசெய்யப்பட்ட பொருளான 1060 கிலோ கடல் அட்டை கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை மகாலட்சுமி நகரில் உள்ள வன உயிரின பாதுகாவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக 12 பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற நடவடிக்கைக்காக மீண்டும் கடல் அட்டை இருப்பு குறித்து வனசரகர் அனந்தீஸ்வரன் சோதனை செய்தார். அப்போது 1060 கிலோ கடல் அட்டையில் 400 கிலோ கடல் அட்டை மாயமானது தெரியவந்தது.

இது குறித்து வனசரகர் அனந்தீஸ்வரர் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றிய நாகை காடம்பாடி பகுதியை சேர்ந்த தற்காலிக ஊழியர் கோவிந்தராஜ் திடீரென தலைமறைவாகி உள்ளார். இதனால் போலீசாருக்கு கோவிந்தராஜ் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

அவரை பிடித்து விசாரித்தால் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்பதால் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தலைமறைவான கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News