தமிழ்நாடு செய்திகள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை பவனி நடந்த போது எடுத்த படம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை பவனி- ஓசன்னா பாடல் பாடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Published On 2022-04-10 14:36 IST   |   Update On 2022-04-10 14:36:00 IST
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறையொட்டி இன்று காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் கிறிஸ்தவர்களின் புனித தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறையொட்டி இன்று காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது.

இதில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். குருத்தோலை பவனியில் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி உன்னதங்களிலே ஓசன்னா, தாவீதின் மைந்தனே ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஓசன்னா என பாடல்களை பாடி பவனியாக சென்றனர்.

இந்த பவனி பேரலாயத்தின் முகப்பு பகுதியில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தின் கீழ்க்கோவிலை வந்தடைந்தது.

தொடர்ந்து பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. குருத்தோலை ஞாயிறையொட்டி இன்று வேளாங்கண்ணியில் கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனை நடைபெறுகிறது.

Similar News