தமிழ்நாடு செய்திகள்
குதிரை பந்தயம்

2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டியில் பார்வையாளர்கள் அனுமதியுடன் குதிரை பந்தயம்

Published On 2022-03-29 09:23 IST   |   Update On 2022-03-29 09:23:00 IST
குதிரை பந்தயத்துக்காக மைதானத்தை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குதிரைகள் ஓடும் பாதையில் புற்கள் சமன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் குதிரை பந்தயம் மிகவும் பிரபலமானது ஆகும். இங்கு ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை பந்தயம் நடத்தப்படும்.

மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு அன்று குதிரைப்பந்தயம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும்.

கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு குதிரைப்பந்தயம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு குதிரைப்பந்தயம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் குதிரைப்பந்தயத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதன்படி குதிரைப் பந்தயத்தை பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குதிரை ஜாக்கிகளும், குதிரைகளின் உரிமையாளர்களும் மட்டுமே பங்கேற்றனர்.

இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு உள்ளதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குதிரைப்பந்தயத்தை வெகுசிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நடைபெறும் பந்தயத்தில் பெங்களூரு, புனே, சென்னை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்கும் என தெரிகிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இதுபற்றி மெட்ராஸ் கிளப் நிர்வாகிகள் கூறுகையில் குதிரை பந்தயத்துக்காக மைதானத்தை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குதிரைகள் ஓடும் பாதையில் புற்கள் சமன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா காரணமாக கடந்த 2020-ல் குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பார்வையாளர்கள் அனுமதியில்லாமல் பந்தயங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் பந்தயத்துக்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் மெட்ராஸ் ரேஸ் கிளப் செய்து வருகிறது என்றனர்.

Similar News