தமிழ்நாடு செய்திகள்
பலியான சகோதரிகள் அர்ச்சனா, அஞ்சலி

கோவை அருகே மின்கசிவால் புகைமூட்டம்: தாய்- 2 மகள்கள் பலி

Published On 2022-03-15 14:06 IST   |   Update On 2022-03-15 14:06:00 IST
வீட்டில் இருந்த யு.பி.எஸ்.சில் மின்கசிவு ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேறிய புகை காரணமாக தாய், 2 மகள்கள் மூச்சுத்திணறி இறந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கவுண்டம்பாளையம்:

கோவை உருமாண்டம்பாளையம் அடுத்த ஜோஸ்கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜோதிலிங்கம். இவரது மனைவி விஜயலட்சுமி(58). இவர்களுக்கு அர்ச்சனா(24), அஞ்சலி(22) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

அர்ச்சனா ஐ.டி. கம்பெனியிலும், அஞ்சலி பைனான்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஜோதிலிங்கம் இறந்து விட்டார். இதையடுத்து விஜயலட்சுமி தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து புகை வெளியேறி கொண்டிருந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வேகமாக ஓடி சென்று கதவை தட்டி பார்த்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் கதவை திறக்கவில்லை. சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர், பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கவுண்டம்பாளையம் வடக்கு நிலைய தீயணைப்பு துறையினருடன் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, சமையல் அறையில் விஜயலட்சுமி மற்றும் அவரது மூத்த மகள் அர்ச்சனா இறந்த நிலையில் கிடந்தனர். மற்றொரு அறையில் அவரது இளையமகள் அஞ்சலி பிணமாக கிடந்தார். மேலும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த வளர்ப்பு நாயும் இறந்து கிடந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் இருந்த யு.பி.எஸ்.சில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியேறிய புகை காரணமாக 3 பேரும் மூச்சுத்திணறி இறந்ததுடன், அவர்கள் வளர்த்து வந்த நாயும் இறந்தது தெரியவந்தது.



Similar News