தமிழ்நாடு செய்திகள்
கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு
கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர்கள் சபை சார்பில் ஆய்வு நடத்தியதில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு நடத்திருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி:
சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்துசமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர்கள் சபை சார்பில் பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு இருப்பின் அவை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி என்னும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்களும் வருவாயும் வரும் நிலையில் கோவில் வளர்ச்சி அடைவதை தடுக்கும் நோக்கில் சில தனி நபர்கள் கோவிலை ஆக்கிரமித்து உள்ளனர்.
அறநிலையத்துறைக்கு தெரியாமல் அவர்களே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் முறையாக கழிப்பிடங்கள் சுகாதார வளாகங்கள் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
போலி ஆவணங்கள் முத்திரைகள் தயாரித்து அதன்மூலம் தனிநபர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.