தமிழ்நாடு செய்திகள்
வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 2.50 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பள்ளி கல்லூரிகள் தவிர வெளியில் இருந்தால் அவர்கள் cowin portal இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகள் 17 லட்சத்து 53 ஆயிரத்து 585 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 லட்சத்து 65 ஆயிரத்து 827 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 21 ஆயிரத்து 493 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 லட்சத்து 43 ஆயிரத்து 851 பேருக்கும் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தல் தற்போது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தடுக்கும் வகையில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் ஐடிஐ வளாகங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 72 ஆயிரத்து 100 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 55 ஆயிரத்து 400 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 600 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 68,000 பேர் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 100 பேருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.
இவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும். இந்த தடுப்பூசிகள் தற்போது போதிய அளவு இருப்பு உள்ளது.
அதே போல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பள்ளி கல்லூரிகள் தவிர வெளியில் இருந்தால் அவர்கள் cowin portal இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.