தமிழ்நாடு
விபத்துக்குள்ளான கார் மரத்தில் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.

கடலூர் அருகே விபத்து- மரத்தில் கார் மோதி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

Published On 2021-12-20 04:14 GMT   |   Update On 2021-12-20 04:14 GMT
கடலூர் அருகே இன்று காலை மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள நீர்முளை பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 68). இவரது மனைவி லலிதா (58).

இவர்கள் நேற்று நள்ளிரவு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு காரில் சென்றனர். காரை சென்னை ஆவடியை சேர்ந்த டிரைவர் கோதண்டம் (50) என்பவர் ஓட்டினார்.

இந்த கார் இன்று அதிகாலை 5 மணி அளவில் கடலூர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராமல் சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதி நின்றது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லலிதா, கார் டிரைவர் கோதண்டம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். ராமு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் கடலூர் துறைமுகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்.

இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமுவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News