தமிழ்நாடு செய்திகள்
கொலை

சிதம்பரம் அருகே திருநங்கை வெட்டிக்கொலை

Published On 2021-12-14 10:12 IST   |   Update On 2021-12-14 10:12:00 IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திருநங்கை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை:

தர்மபுரி அருகே பொன் நகர் சாமிசெட்டிபட்டி போலீஸ் சரகம் போலன நல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பனிமலர் (வயது 30). திருநங்கையான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் வசித்து வந்தார்.

இன்று அதிகாலை பனிமலர் பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் பகுதியில் உள்ள தைலக்காட்டில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

அவரது முகம், உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அவரை மர்மநபர்கள் கொலை செய்து வீசி சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு பிணமாக கிடந்த திருநங்கை பனிமலர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

என்றாலும், பனிமலரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News