தமிழ்நாடு
உடைந்த தக்காளி

கோயம்பேடு மார்க்கெட்டில் உடைந்த தக்காளியும் விலை போனது

Published On 2021-12-02 02:45 GMT   |   Update On 2021-12-02 02:45 GMT
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிக்கும் பட்சத்தில்தான் தக்காளி விலை சற்று குறையும் என்றும், அதுவரை இதுபோல் ஏற்ற, இறக்கத்துடனேயே விலை நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை :

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. பின்னர் சற்று விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிலோ ரூ.140 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த 25-ந்தேதி ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை ஆனது.

அதற்கு மறுநாள் மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.60-க்கும், அதனைத் தொடர்ந்து மீண்டும் விலை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்து, முதல் ரக தக்காளி ரூ.70-க்கும், கடைசி ரக தக்காளி ஒரு கிலோ ரூ.55-க்கும் விற்பனை ஆனது.

பொதுவாக தக்காளி உடைந்து போனாலோ அல்லது கீறல் விட்டு இருந்தாலோ அதை வியாபாரிகளோ, பொதுமக்களோ வாங்க சற்று தயக்கம் காட்டுவார்கள். ஆனால் நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உடைந்த தக்காளி கூட நல்ல விலைக்கு போனதாக கூறப்படுகிறது. உடைந்த, கீறல் விட்டு இருந்த, நசுங்கி காணப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிக்கும் பட்சத்தில்தான் தக்காளி விலை சற்று குறையும் என்றும், அதுவரை இதுபோல் ஏற்ற, இறக்கத்துடனேயே விலை நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News