செய்திகள்
ஊட்டி மஞ்சணக்கொரை பகுதியில் வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் காட்சி.

கனமழையால் ஊட்டியில் அந்தரத்தில் தொங்கிய 2 வீடுகள்

Published On 2021-11-20 09:37 IST   |   Update On 2021-11-20 09:37:00 IST
குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான அருவங்காடு, எல்லநள்ளி, பாய்ஸ் கம்பெனி, பர்லியார் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்தமழை பெய்து வருகிறது.
ஊட்டி:

வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதவிர சில வீடுகளும் சேதம் அடைந்தன.

தொடர் மழையால் ஆறுகள், நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்ந்து நேற்று இரவில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் இன்று காலை முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

ஊட்டி மஞ்சனக்கொரை அருகேயுள்ள அன்பு அண்ணா காலனியில், ஏராளாமான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக இந்த பகுதியையொட்டி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த பகுதியில் உள்ள சில வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. சில வீடுகளின் சுவர்களில் விரிசலும் விழுந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே உள்ளே வசித்து வருகிறார்கள்.

உடனடியாக இதற்கு ஒரு நிரந்த தீர்வு காண வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான அருவங்காடு, எல்லநள்ளி, பாய்ஸ் கம்பெனி, பர்லியார் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றோரங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் நிலை உள்ளது.

கோவை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், ரெயில்நிலை உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால், மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
Tags:    

Similar News