செய்திகள்
கொடநாடு வழக்கில் விரைவில் பல உண்மைகள் வெளிவரும்- கி.வீரமணி
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
ஊட்டி:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டம் திராவிட கல்வி திட்டம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு இருக்கக்கூடாது.
தமிழக அரசுக்கு மட்டுமே துணை வேந்தர்கள் நியமிக்க அதிகாரம் இருக்கிறது. கடந்த 5 ஆண்டு காலங்களில் துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாட்டின் தன்மானத்தை அப்போதைய அரசு அதிகாரத்தை பறிகொடுத்து விட்டது. தற்போதைய தமிழக அரசு துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் அணுகுமுறையை மாற்ற வேண்டும். பறிகொடுத்த அதிகாரத்தை மீட்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது. கொடநாடு வழக்கில் பல உண்மைகள் விரைவில் வெளிவரும்.
தமிழ்நாடு தினம் நவ 18-ந்தேதி கொண்டாடுவதே சிறப்பானது. நவ.1-ல் கொண்டாடுவது ஏற்புடையதல்ல. ஓய்வுபெறும் நாளில் அரசு அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யக்கூடாது என கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் சிறந்த சட்டமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.