செய்திகள்
ஈரோடு பெரிய மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் விற்பனைக்கு தக்காளி.

ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை

Published On 2021-10-08 10:32 IST   |   Update On 2021-10-08 10:32:00 IST
கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
ஈரோடு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் எதிரொலியாக காய்கறிகளின் விளைச்சல் குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வ. உ. சி. பூங்கா பகுதியில் நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம், சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. தர்மபுரி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து ஈரோடு வ.உ.சி. பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தது.

இதனால் 1 கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 1,500 தக்காளி பெட்டிகள் மட்டுமே வருகிறது.

இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட்டது. கடைகளில் சில்லரை விலையில் கிலோவுக்கு ரூ.60 வரை விற்கப்படுகிறது. தக்காளி திடீர் உயர்வால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் இதே நிலைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News