செய்திகள்
கோப்புபடம்

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை

Published On 2021-07-23 19:57 GMT   |   Update On 2021-07-23 19:57 GMT
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோருக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனையும் விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 57). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் பிரபு (25). இவரும், அதே பகுதியை சேர்ந்த 24 வயதும் பெண்ணும் காதலித்தனர். மேலும் பிரபு அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதை அறிந்த இளம்பெண், பிரபுவிடம் சென்று தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறினார்.

அதற்கு பிரபு, தான் வேலை இல்லாமல் இருப்பதாகவும், வேலை கிடைத்தவுடன் உடனே திருமணம் செய்து கொள்வதாகவும், தற்போது கருவை கலைத்துவிடுமாறும் கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்தார். இதை நம்பிய இளம்பெண், மாத்திரையை சாப்பிட்டு, கருக்கலைப்பு செய்தார். இந்தநிலையில், பிரபுவுக்கு நீதிமன்றத்தில் நிரந்த ஊழியர் வேலை கிடைத்தது. இதுபற்றி அறிந்த இளம்பெண், தனது குடும்பத்தினருடன் பிரபு வீட்டுக்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு பிரபு மற்றும் அவரது பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, அந்த இளம்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து அந்த இளம்பெண், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பிரபு, அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று, இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையில் ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News