செய்திகள்
குடிநீர் பைப்லைனை சரி செய்யும் பணி

மக்களின் குறைகளை தீர்க்க சொந்த செலவில் பணியாளர்களை நியமித்த புதுக்கோட்டை எம்எல்ஏ

Published On 2021-07-02 13:56 GMT   |   Update On 2021-07-03 16:07 GMT
மக்கள் கொடுக்கும் புகார் மனுவின் அடிப்படையில், அந்தந்த பகுதிகளுக்கு உடனுக்குடன் பணியாளர்களை அனுப்பி பணிகளை மேற்கொள்ள செய்கிறார் எம்எல்ஏ முத்துராஜா.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, தனது தொகுதியில் மக்கள் நலப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருகிறார். மக்கள் கொடுக்கும் புகார் மனுவின் அடிப்படையில், அந்தந்த பகுதிகளுக்கு உடனுக்குடன் பணியாளர்களை அனுப்பி பணிகளை மேற்கொள்ள செய்கிறார். 

அவ்வகையில், புதுக்கோட்டை நகர்ப்புற பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து விரைந்து நிவர்த்தி செய்வதற்காக, எம்எல்ஏ முத்துராஜா, தனது சொந்த முயற்சியில் முத்துக்குமார் (9597693317), பால்ராஜ் (8760313860) ஆகிய பணியாளர்களை நியமித்துள்ளார். அவர்களை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்புகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கூறி உள்ளார். 



பூங்கா நகர் 1ம் வீதி பகுதியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில் அதை சரிசெய்யும் பணி நடைபெற்றது. சார்லஸ் நகர் 2ம் வீதியில் குடிநீர் குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டது. புதிய பேருந்து நிலைய சிறு நீர் கழிப்பிடம் மற்றும் தண்ணீர் குழாய்கள் சரி செய்யப்பட்டன.



காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ வை.முத்துராஜா, அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் செடிகொடிகள் முளைத்தும் குப்பைகள் தேங்கி கிடந்ததையும் கவனித்தார். உடனடியாக மைதானத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நகராட்சி பணியாளர்கள் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News