செய்திகள்
பவானிசாகர் அணை (கோப்புப்படம்)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2947 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2021-06-16 08:32 GMT   |   Update On 2021-06-16 08:32 GMT
நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி ஆகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் பவானி சாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, குந்தா, பில்லூர் அணை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் அணைக்கு நீர்வரத்து 137 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து 2667 கனஅடியாக அதிகரித்தது. அது படிப்படியாக உயர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் 6 ஆயிரத்து 278 கன அடி நீர் அணைக்கு வந்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 947 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 89.14 அடியாக உயர்ந்து உள்ளது.

அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News