மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது கடத்திய 3 பேர் கைது
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநில மது, தமிழகத்தில் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் கர்நாடகாவில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களில் மது கடத்தல் அமோகமாக நடக்கிறது. இந்த நிலையில் ரெயிலிலும் மதுவை கடத்தி வர தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து ரெயிலில் மது கடத்தி வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து ஈரோடு மதுவிலக்கு போலீசார் ஈரோடு ரெயில்வே நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு வந்த மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். இதில் மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த மதன்குமார் (வயது 28) என்பவரிடம் இருந்து 164 கர்நாடகா மாநிலம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மதன்குமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
இதேபோல் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு ஈரோடு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சியை சேர்ந்த நெப்போலியன் (33), ஜான் (23) ஆகியோரிடம் 31 கர்நாடக மாநிலம் மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.