அந்தியூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலி
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மற்றும் 47 வயதுடைய அவரது மனைவி ஆகியோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் கணவன்-மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால் அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆணின் தாய், சித்தப்பா, சித்தி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த 4 நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.