போச்சம்பள்ளி அருகே மருத்துவமனையில் சேர்க்காததால் கொரோனா நோயாளி தர்ணா
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார கிராமங்களில், கொரோனா அதிகளவில் பரவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று போச்சம்பள்ளி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர், கொரோனா அறிகுறியுடன் போச்சம் பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்காமல் கிருஷ்ணகிரி அல்லது தருமபுரி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு வெளியே அனுப்பினர். இதை கண்டித்து அந்த நபர் போச்சம்பள்ளி நான்கு சாலை சந்திப்பில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது :
இங்கு மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். கூடுதலாக மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். இங்கு, 45 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் குறைந்த நபர்கள் கிருஷ்ணகிரி, பர்கூரில் உள்ள சிறப்பு முகாம்களில் தான் சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.