செய்திகள்
கோப்புப்படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை-படுக்கை வசதி குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

Published On 2021-05-13 06:18 GMT   |   Update On 2021-05-13 06:18 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதலை தடுக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் கோவிட் பாதுகாப்பு மையங்களில் 131 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு:

கொரோனா சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி, வெண்டிலேட்டர் கருவிகள் ஆகியவற்றின் இருப்பு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஆய்வகம் மூலம் உறுதி செய்யப்பட்டவர்களின் முதலில் பரிசோதனை செய்து தொற்றின் தீவிரம் அறிய ஏற்படுத்தப்பட்ட வகைப்படுத்தல் மையம் குறித்த விவரங்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,038 நபர்களில் தற்போது 10,644 நோயுற்ற நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 1,209 நோயாளிகள் கோவிட் மருத்துவமனைகளிலும், 1,054 நோயாளிகள் கோவிட் சுகாதார மையங்களிலும் 131 நோயாளிகள் கோவிட் பாதுகாப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதலை தடுக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் கோவிட் பாதுகாப்பு மையங்களில் 131 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 2,825 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுடைய மொத்த படுக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவ னையில் 480 படுக்கைகளில் 475 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும், நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவும், அரசு மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சென்னைக்கு அருகாமையில் உள்ளதாலும், தொற்று நோய் பரவும் விகிதம் ஏறு முகமாக உள்ளதாலும், அனைத்து வருவாய்த்துறை சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினரைச் சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதிக அளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, நோய் தொற்றினை குறைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), ஐ.கருணாநிதி (பல்லாவரம்), எஸ்.அரவிந்த ரமேஷ் (சோழிங்க நல்லூர்), பாலாஜி (திருப்போரூர்), எம். பாபு (செய்யூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) அரசு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News