ஆலங்குடி அருகே கொரோனாவுக்கு பலியானவர் உடலை அடக்கம் செய்த உறவினர்கள் அச்சம்
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த 40 வயது வாலிபர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நுரையீரல் பாதிப்புடன் மூச்சு திணறலும் ஏற்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்கு அங்கே மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறை ஊழியர்கள் இல்லாததால் உறவினர்கள் சடலத்தை பெற்று சொந்த ஊருக்கு கொண்டு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமான குழி தோண்டி அடக்கம் செய்தனர்.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, கொரோனாவால் இறந்தவர் உடலை மருத்துவமனையில் பிளாஸ்டிக் பையில் சுற்றி தொற்று பரவாமல் இருக்க சுகாதார ஊழியர்களே அடக்கம் செய்வார்கள். தற்போது நாங்கள் கொண்டு வந்து அடக்கம் செய்துள்ளது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.