செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

மதுரை மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்தது

Published On 2021-04-18 08:53 GMT   |   Update On 2021-04-18 08:53 GMT
கொரோனா தொற்று பரவல் மதுரையில் அதிகரித்து வருவதால் சில நாட்களாக பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றன. ஜனவரி 16-ந்தேதி தொடங்கிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இதுவரை மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் மதுரையில் அதிகரித்து வருவதால் சில நாட்களாக பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தினந்தோறும் 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஏப்ரல் 15 மற்றும் 16-நதேதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்னர்.

இதற்கிடையே மதுரை மருத்துவக்கல்லூரி மற்றும் மாவட்ட அரசு மற்றும் சுகாதார மையங்களில் 980 தடுப்பூசிகள் மட்டும் இருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் அர்ஜூன்குமார் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் 980 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது உண்மைதான். ஆனால் நேற்று 5 ஆயிரம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகள் மதுரைக்கு வந்து சேர்ந்தன.

அவை மதுரை மாவட்ட சுகாதார கிட்டங்குகளில் பத்திரப்படுத்தப்பட்டு இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

மதுரை மாவட்டத்துக்கு அடுத்த சில நாட்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேரும் என்றார்.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 980 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இந்த நிலையில் மேலும் 5 ஆயிரம் டோஸ் மருந்துகள் வந்துள்ளதால், கொரோனா தடுப்பூசி இருப்பின் அளவு 5,980 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 5,066 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே 235 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் ஒருவரும், தனியார் ஆஸ்பத்திரியில் ஒருவரும் நேற்று இறந்தனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 1,868 பேருக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News