செய்திகள்
விபத்து

மொடக்குறிச்சி அருகே பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து 3 பேர் பலி

Published On 2021-03-31 14:58 IST   |   Update On 2021-03-31 14:58:00 IST
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அவல்பூந்துறை அடுத்த கொளாங்காட்டுவலசு பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று இரவு 11.30 மணி அளவில் நடந்தது.

இதில் இந்த பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈரோடு-பழனி மெயின் ரோட்டில் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ஈரோட்டில் இருந்து அரச்சலூர் நோக்கி வேகமாக ஒரு கார் அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.

அந்த காரை அவல் பூந்துறை, காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். காரில் அவரது மனைவி சமீம் பாத்திமா (26), அவரது மகன்கள் ஆஜித் (8), சுஜித் (1) ஆகியோர் இருந்தனர்.

திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்த்தக் குடம் எடுத்து வந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து தறிகெட்டு ஓட தொடங்கியது.

கார் கூட்டத்தில் புகுந்ததால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் நாலாபுறமும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். தறிகெட்டு ஓடிய கார் பக்தர்கள் மீது மோதியது. பின்னர் அந்த பகுதியில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை இடித்து சேதப்படுத்தி அருகில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் வடக்கு வெள்ளியம்பாளையம், அரிஜன காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் (40), அதே பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள் (45) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (42), கணபதி, அம்மணி, மகேஸ்வரி, ரஞ்சித், பொன்னுசாமி, விஸ்வநாதன், ராமசாமி, சேகர், முருகன், கார்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கார் புளிய மரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. காருக்குள் இருந்த யுவராஜ், அவரது மனைவி, 2 மகன்கள் ஆகியோருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதி முழுவதும் காயமடைந்தவர்கள் மரண ஓலம் எழுப்பியபடி இருந்தனர்.

இந்த விபத்து குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதே போன்று 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

மேலும் காரை ஓட்டி வந்த யுவராஜ், அவரது மனைவி 2 மகன்களுக்கும் காயம் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News