தொழிலாளி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள் (வயது 65), தொழிலாளி. அதே பகுதியில் நெல்லை மாவட்டம் இடையான் குடியைச் சேர்ந்த சாமுவேல், அவரது தங்கை ரபேக்காள் என்பவருடன் தங்கியிருந்து கூலிவேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் வேலாயுத பெருமாள், ரபேக்காளிடம் தகராறு செய்யவே, அதனை சாமுவேல் தட்டிக்கேட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வேலாயுத பெருமாள், சாமுவேலை கத்தியால் குத்திக்கொன்றார். இந்த சம்பவம் கடந்த 31.5.1990 அன்று நடைபெற்றது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக வேலாயுதபெருமாளை கோட்டைப்பட்டினம் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த வேலாயுதபெருமாள் அதன்பிறகு மாயமாகி விட்டார். அவரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இருப்பினும் வேலாயுத பெருமாள் கடந்த 30 ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், வேலாயுதபெருமாள் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோட்டைப்பட்டினம் போலீசார் நம்பியூர் சென்று வேலாயுத பெருமாளை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்ததையடுத்து இன்று நீதிபதி அப்துல் மாலிக் தீர்ப்பு வழங்கினார். இதில் வேலாயுத பெருமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.1,000 அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து வேலாயுதபெருமாளை போலீசார் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.