செய்திகள்
அன்பரசன்-ஞானசேகரன்

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை- ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை

Published On 2021-01-19 03:06 GMT   |   Update On 2021-01-19 03:06 GMT
மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நரியன்புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அன்பரசன் (வயது 52). இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஞானசேகரன் (50). கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலரை அன்பரசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் நேற்று நீதிபதி டாக்டர் சத்யா தீர்ப்பு அளித்தார். இதில் ஆசிரியர் அன்பரசனுக்கு போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், வன்கொடுமையை வெளியில் சொல்லாமல் இருக்க மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், இதனை ஏக காலத்தில் (7 ஆண்டுகள்) அனுபவிக்கவும் தீர்ப்பு கூறினார்.

மேலும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 6 மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவின் கீழ் தலா 7 ஆண்டுகளும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், இதனை தொடர்ச்சியாக தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி ஆசிரியர் அன்பரசனுக்கு 7 ஆண்டுகள் மற்றும் 42 ஆண்டுகள் சேர்த்து மொத்தம் 49 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஏற்கனவே தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News