செய்திகள்
கோபியில் மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண ஜோடியை படத்தில் காணலாம்.

கோபியில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற புதுமண தம்பதிகள்

Published On 2020-11-28 03:26 GMT   |   Update On 2020-11-28 03:26 GMT
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பழங்கால முறைப்படி மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
கடத்தூர்:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். இவருடைய மகன் கவுதமன். என்ஜினீயர். சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் கதிராநந்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் சவுந்தர்யா. வேளாண்மையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். இவர்களுடைய திருமணம் நேற்று கோபியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கவுதமனும், சவுந்தர்யாவும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் திருமணம் முடிந்ததும் பழங்கால முறைப்படி மணமக்களை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு எடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று திருமணம் நடந்ததும் புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் ஏறி, கோபி நகர வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்களை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். 7 கி.மீ. தூரத்தில் உள்ள வெள்ளாளபாளையத்துக்கு மாட்டு வண்டியிலேயே புதுமண தம்பதிகள் அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதிகள் கூறுகையில், ‘நாங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வரும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நினைவு கூற வேண்டும் என்பதற்காக மாட்டுவண்டி பயணத்தை மேற்கொண்டோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது’ என்றனர்.
Tags:    

Similar News