செய்திகள்
கோப்புப்படம்

புதுவை ஜெயிலில் கைதிகளின் அறையில் 5 செல்போன்கள் பறிமுதல்

Published On 2020-10-06 11:37 IST   |   Update On 2020-10-06 11:37:00 IST
புதுவை ஜெயிலில் கொலை வழக்கில் கைதாகி அடைக்கப்படும் முதல் யார்டில் நடந்த சோதனையில் 5 மொபைல் போன், பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:

முத்தியால்பேட்டை வாழைக்குளத்தில் கடந்த 7-ந் தேதி கதர்வாரிய அதிகாரி கணேசன் படுகொலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் முன்னாள் கவுன்சிலர் மாந்தோப்பு சுந்தர், நேற்று முன்தினம் நடிகர் விஜய்சேதுபதி நற்பணி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது கதர்வாரிய அதிகாரி கணேசன் உள்ளிட்ட கொலைக்கான திட்டங்கள் அனைத்தும் ஜெயிலில் உள்ள ரவுடிகள் மூலம் வகுக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் பரிந்துரையின் பேரில் சிறை அதிகாரிகள் நேற்று மாலை கைதிகளின் அறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொலை வழக்கில் கைதாகி அடைக்கப்படும் முதல் யார்டில் நடந்த சோதனையில் 5 மொபைல் போன், பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சிறை அதிகாரி புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போனில் பேசும் போது சிக்னல் டிராக் மூலம் போலீசார் கண்டுபிடிக்க முடியும் என்பதால் வாட்ஸ்அப் காலில் வெளிநபர்களுடன் பேசியுள்ளனர். இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News