செய்திகள்
கொலை செய்யப்பட்ட சேகர்

செங்கல்பட்டு அருகே அதிமுக பிரமுகர் கொலை- 6 பேர் போலீசில் சரண்

Published On 2020-09-28 03:16 GMT   |   Update On 2020-09-28 03:16 GMT
செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த செல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவர் 3 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று தனது நண்பர் சக்கரவர்த்தி புதிதாக கட்டிவரும் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் சேகரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் சேகரின் தலையை துண்டாக வெட்டி எடுத்த மர்மநபர்கள் சாலையில் வீசிச்சென்றனர். தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரது உடலை கைப்பற்றிய செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டப்பகலிலேயே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட சேகருக்கு சித்ரா என்ற மனைவியும், 9 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர்.

இந்த கொலையில் தொடர்புடையதாக பொன்விளைந்த களத்தூர் சுரேஷ் (38), செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19), சுண்ணாம்புகாரத்தெரு மொய்தீன் (19), கே.கே. தெரு பாபு (24), ஆலவாய் மாரியம்மன் கோவில் தெரு மகேஷ் (30), மேட்டுத்தெரு கவுதம் (25) ஆகியோர் செங்கல்பட்டு டவுன் போலீசில் சரண் அடைந்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டு பி.வி. களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த விஜயகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் அவரது தம்பி சுரேஷ் இந்த கொலையை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

ஏற்கனவே அவர் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டை, மறைமலைநகர், பி.வி.களத்தூர் என 3 இடங்களில் வைத்து 3 பேரை கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
Tags:    

Similar News