செய்திகள்
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா

காஞ்சிபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும்- கலெக்டர் தகவல்

Published On 2020-09-16 09:30 IST   |   Update On 2020-09-16 09:30:00 IST
காஞ்சிபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே சென்னை- பொன்னேரிக்கரை- காஞ்சிபுரம் சாலையில் ரூ.50 கோடியே 78 லட்சம் செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பாலப்பணிக்கான வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 66 தூண்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள. இந்த நிலையில் நேற்று ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ரெயில்வே மேம்பாலத்தின் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த பாலப்பணி முடிவடையும் சூழலில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். இந்த பாலத்தினால் வெகுநேரம் ரெயில்வே பாலத்தை கடக்க காத்திருக்கும் நேரம் குறையும். இதனால் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன், காஞ்சிபுரம் தாசில்தார் பவானி, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பெரியண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News